சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ரூ.304 உயர்ந்து ஒரு சவரன் ரூ.29,744-க்கு விற்பனையாகிறது.
கடந்த ஒரு சில வாரங்களாக, முன் எப்போதும் இல்லாத அளவில் தங்கத்தின் விலை தொடரந்து உயர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. அந்தவகையில், இன்றும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ. 29,744க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.3,718-க்கு விற்பனையாகிறது. இதையடுத்து, ஆபரண தங்கத்தில் விலை சவரன் ரூ.30,000-த்தை நெருங்குகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும், உலக பொருளாதாரம் சீரான நிலைமையில் இல்லாததுமே, தங்கத்தில் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம், பெரிய முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்வது கூட காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, தங்கம் விலை மேலும் உயரும் என தங்க நகை வியாபாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. இதனால், இந்த வாரத்திற்குள் சவரன் ரூ.30,000-த்தை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.3000 உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயை தாண்டியது. ஜூலை மாதம் சவரனுக்கு 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் 27 ஆயிரத்தைக் தாண்டியது. இதையடுத்து அடுத்த 4 நாட்களில் 28 ஆயிரத்தையும் தாண்டியது. ஆகஸ்ட் 14ம் தேதி 29 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமையன்று, சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.29,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.29,440-ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.