This Article is From Apr 21, 2020

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தை தடுத்தால் குண்டர் சட்டம்: காவல் ஆணையர்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவரோ, சாதாரண நோயாளிகளோ யார் உயிரிழந்தாலும் அவர்கள் உடலை அடக்கம் செய்யத் தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தை தடுத்தால் குண்டர் சட்டம்: காவல் ஆணையர்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தை தடுத்தால் குண்டர் சட்டம்: காவல் ஆணையர்

ஹைலைட்ஸ்

  • கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தை தடுத்தால் குண்டர் சட்டம்
  • யார் உயிரிழந்தாலும் அவர்கள் உடலை அடக்கம் செய்யத் தகுந்த பாதுகாப்பு
  • குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தால் குண்டர் சட்டம் பாயும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னையில் நரம்பியில் மருத்துவர் சைமன் ஹெர்குலஸூக்கு அவரது நோயாளிகளிடமிருந்து, அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்ட சென்ற போது மக்கள் சிலர் கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும் என்ற அச்சத்தில், மருத்துவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய விடாமல், தடுத்து நிறுத்தியதோடு, அந்த ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவர்கள் மீது கற்கள், பாட்டில்களையும் வீசி தாக்கியுள்ளனர். இதில், ஆம்புலன்ஸ் ஒட்டுநருடன், சில சுகாதாரத்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். அடுத்தடுத்து, இரண்டு மயானங்களிலும்
அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சக மருத்துவர் ஒருவரே அவரது உடலை மருத்துவ பணியாளர்களின் உதவியுடன் அடக்கம் செய்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக 21 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது கலவரம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் இறந்தவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தாலோ, அல்லது அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தினாலோ குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்தார்.

இதுகுறித்து அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில். ''கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவரோ, சாதாரண நோயாளிகளோ யார் உயிரிழந்தாலும் அவர்கள் உடலை அடக்கம் செய்யத் தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும்.

அவ்வாறு செல்லும்போது உடல் அடக்கத்துக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தாலோ, தாக்கினாலோ இடையூறு செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

.