தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு தொடர் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த போராட்டத்தின் 100வது நாளையொட்டி, கடந்த ஆண்டு மே 22–ந் தேதி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அறியாமல், போராட்டக்காரர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இதில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் இன்னும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து மனித உரிமைகள் ஆணையம் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தியது. காயப்பட்டவர்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தும் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று முடித்து வைத்தது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய இழப்பீடு தொகைகளும், தமிழக அரசு அமைத்த ஒரு நபர் கமிஷன் போன்ற நடவடிக்கைகளும் தங்களுக்கு திருப்திகரமாக இருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.