கோதுமைக்கான அடிப்படை ஆதார விலையை (எம்.எஸ்.பி.) மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
6 சதவீதம் அடிப்படை ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 62,635 கோடி கூடுதல் வருமானத்தை விவசாயிகள் பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடியது. இதில்தான் ராபி பருவத்தில் பயிரிடப்படும் கோதுமைக்கு கூடுதல் அடிப்படை ஆதார விலை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றார்.
சில மாதங்களுக்கு முன்பாக கரீப் பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு அதன் உற்பத்தி விலையை விட 50 சதவீதம் அதிக தொகையை மத்திய அரசு அறிவித்தது.
தற்போது எடுக்கப்பட்ட முடிவின்படி கோதுமை குவிண்டாலுக்கு ரூ. 105 கூடுதலாக கிடைக்கும் என வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.