காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் சீனாவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்று எச்சரித்துள்ள மத்திய அரசு, காஷ்மீரின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
புதன் கிழமை நள்ளிரவு முதற்கொண்டு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது 2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் மாறியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் தெரிவித்த கருத்துதான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
'இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த 2 யூனியன் பிரதேசங்களில் சீனாவுக்கு சொந்தமான பகுதிகள் சிலவும் இருக்கின்றன.
இந்தியாவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இது சட்டவிரோதமான செயலாகும். செல்லத்தகுந்ததும் அல்ல. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்தவொரு பகுதியையும், இந்திய அரசின் நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தாது.'' என்று சீன செய்தி தொடர்பாளர் ஜெங் தெரிவித்திருந்தார்.
இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருபகுதி. காஷ்மீர் விவகாரம் என்பது உள்நாட்டு பிரச்னை. இதில் சீனா உள்பட எந்தவொரு வெளிநாடும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவின் சில பகுதிகளை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.