Read in English
This Article is From Sep 06, 2018

‘விஜயபாஸ்கர், ராஜேந்திரனை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்!’- ஸ்டாலின் கருத்து

குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
இந்தியா Posted by

குட்கா ஊழல் தொடர்பாக இன்று சென்னையில் தமிழக டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக-வின் தலைவரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘ராஜேந்திரன் மற்றும் விஜயபாஸ்கர் தானாக பதவி விலகவில்லை என்றால், அவர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கருத்து கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிஜிபி ராஜேந்திரனும் அமைச்சர் விஜயபாஸ்கரும் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தால், அது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய இழுக்கு ஆகும். அவர்கள் தானாக பதவி விலகவில்லை என்றால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும். குட்கா ஊழல் தொடர்பாக எந்த வித விசாரணையும் நடந்து விடக் கூடாது என்பதற்காக ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருந்தும் தற்போது சிபிஐ ரெய்டு வரைக்கும் விவகாரம் வந்துள்ளது. சிபிஐ ரெய்டு, தமிழகத்துக்கு மிகப் பெரிய இழிவைத் தந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு, ராஜேந்திரனுக்கு இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம், குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் குட்கா அதிபர் மாதவ ராவிடம் விசாரணை நடத்திய சிபிஐ, அவரது கிடங்கிற்கு சீல் வைத்தது. குட்கா அதிபர் மாதவ ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பெயர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெயர்களின் அடிப்படையில் ஏராளமானோரின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை செய்து வருகிறது.

தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் தரப்பட்டதாக சோதனை நடத்தும் ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

Advertisement

கடந்த 2016 ஆம் ஆண்டு, வருமான வரித் துறையினர் மாதவ ராவ் அலுவலகத்தில் சோதனையிட்டு அவரின் டைரியை கைப்பற்றிய போது, அதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டதற்கான தகவல் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement