This Article is From Jan 09, 2020

குமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

சட்டப்பேரவையில் இவ்விவகாரம் குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வில்சனை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய தென்மண்டல ஐஜிக்கு ஆணையிட்டுள்ளதாக தகவல் அளித்தார். 

குமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

குமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவு ஆய்வாளர் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில், சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன்என்பவர் பணியாற்றி வந்தார். இவர் நேற்றிரவு வழக்கம்போல் தனது பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இரவில் நிகழ்ந்த இச்சம்பவத்தால், பெரும் பரபரப்பு நிலவியது

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வில்சனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய
பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் முகத்தை மறைத்தபடி வந்த இளைஞர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

தொடர்ந்து, சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ நேரத்தில் அந்த பகுதியில் இருந்த நபர் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் இவ்விவகாரம் குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வில்சனை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய தென்மண்டல ஐஜிக்கு ஆணையிட்டுள்ளதாக தகவல் அளித்தார். 

மேலும் எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.ஐ. வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். 

.