This Article is From Sep 06, 2018

தொழில் முனைவோருக்கான முக்கியப் பயிற்சி- தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அளவில் உள்ள தொழில் முனைவோர்களுக்கான, ‘பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு’ பயிற்சி, அரசு சார்பில் இலவசமாக அளிக்கப்பட உள்ளது

தொழில் முனைவோருக்கான முக்கியப் பயிற்சி- தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அளவில் உள்ள தொழில் முனைவோர்களுக்கான, ‘பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு’ பயிற்சி, அரசு சார்பில் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசு அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்தப் பயிற்சி தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், (www.editn.in), (தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனம்) சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு 2013 - 2014 ஆம் ஆண்டில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) அறிவித்தது. இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 3891 பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர். மேலும் பிரதமரின் சுய வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) ஆகியவற்றின் வாயிலாகவும் பல்லாயிரம் தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன.

தற்பொழுது தொழில் நடத்திக்கொண்டிருக்கும் தொழில்முனைவோர்களுக்காக, “பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு” குறித்து ஒரு நாள் பயிற்சி, வரும் 11.09.2018 அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032 என்ற விலாசத்தில் நடைபெற உள்ளதால், தொழில் செய்து வரும் தொழில் முனைவோர்கள், வருகை தந்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் பெயரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நேரிலோ அல்லது இணைதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

.