சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் ஏறத்தாழ 19 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தினை கடந்திருக்கின்றது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டத்தின் ஜமல்பூர்-காடியா சட்டமன்ற தொகுதி உறுப்பினரான காங்கிரசை சேர்ந்த இம்ரான் கெதாவாலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் தொற்றால் பாதிக்கப்பட்டவராகக் கண்டறியப்படுவதற்கு முன்பு, அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் இரண்டு அமைச்சர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் இவர் பங்கெடுத்திருந்தார்.
சமீப காலமாக உடல் வெப்பநிலை தொடர்ந்து மாறுபட்டு இருந்த காரணத்தினால் அவர் சோதனை மேற்கொள்வதற்கு தேவையான மாதிரிகளைக் கொடுத்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்ய்படப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையில் தற்போது கெதாவாலா காந்திநகரின் எஸ்விபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இது கொரோனா தொற்றுக்கான மருத்துவமனையாகும்.
எம்.எல்.ஏ முன்னதாக கெதாவாலா முதல்வருடனான சந்திப்பில் சமூக இடவெளி பின்பற்றி அமர்ந்திருப்பது, வீடியோவில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின், அவருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கான விவரங்கள் இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தினை பொறுத்தவரையில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 55 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் அதிக அளவில் உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று.
மாநிலத்தின் தகவல்களை பகுப்பாய்வு செய்த என்.டி.டிவியின் பிரன்னாய் ராய்யின் ஆய்வின் படி, குஜராத் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவுகள் பெரிய அளவிலான பலன்களைத் தரவில்லை. எனினும், மற்ற மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பயன்படுகின்றது. மகாராஷ்டிராவுடன் குஜராத்திலும் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த இரண்டு நாட்களில் குஜராத்தில் தொற்று பரவல் இரண்டு மடங்காக இருக்கிறது.
ஏற்கெனவே முதலில் அறிவித்திருந்த கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையான முழு முடக்க(lockdown) நடவடிக்கை தற்போது நீட்டிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி மறு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இனி வரக்கூடிய ஒரு வாரக்காலம் மிக முக்கியமானது என்று குறிப்பிட்டிருந்தார். இக்காலகட்டங்களில் மாநிலங்கள் பரிசோதனைகளில் இருக்கும் என்றும், இந்த முழு முடக்க நடவடிக்கை சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை மத்திய அரசு கவனிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.