பப்ஜி மொபைல் கேம், உலக அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அகமதாபாத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் ஒருவர், தன் கணவரிடம் இருந்து விவாகருத்து வேண்டும் எனக் கேட்கிறார். இருவருக்கும் இடையில் சண்டையோ, சச்சரவோ இல்லை. அந்தப் பெண்ணுக்கு ‘பப்ஜி அடிக்ஷன்'. அதுதான் பிரச்னை.
தன் நிலைமை குறித்து தெரிவிக்க அந்தப் பெண், 181 பெண்கள் உதவி எண்ணிற்கு அழைத்துள்ளார்.
ஆனால், அழைப்பின் ஆரம்பத்தில் தன் பிரச்னையை முழுவதுமாக சொல்லாமல் பூசி மொழுகியுள்ளார். தன் குடும்பம் மற்றும் கணவரிடம் இருந்து விலகி பத்திரமாக ஓர் இடத்தில் தங்க வேண்டும் என்பதை மட்டும் அவர் அழைப்பின் போது கூறியுள்ளார். பப்ஜி கேமை, எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் விளையடலாம் என்ற நோக்கமே, இந்த அழைப்புக்கு காரணமாக இருந்துள்ளது. அவருக்கு 1 வயதில் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து 181 பெண்கள் உதவி எண் ஒருங்கிணைப்பாளர் ஃபால்குனி படேல் நம்மிடம் பேசுகையில், “தன் கணவருடன் வாழப் பிடிக்கவில்லை. அதனால், பத்திரமான ஓர் இடத்தில் இருக்க விரும்புகிறேன் என்று அந்தப் பெண் சொன்னார். தன் பெற்றோர் வீட்டுக்கும் போக விருப்பமில்லை என்று அவர் சொன்னார்.
நாங்கள், எங்கள் பாதுகாப்பில் நீங்கள் இருக்கும்போது செல்போன் தரப்படாது என்று சொன்னவுடன், அது குறித்து பேசுவதை நிறுத்திவிட்டார். தனக்கு ஒரு நண்பர் இருப்பதாகவும், அவரிடம் தொடர்பு கொள்ள விரும்புவதாகவும் கூறினார். பின்னர்தான் தெரிந்தது, அது அவருடைய பப்ஜி பார்ட்னர் என்று” என விளக்கினார்.
தொடர்ந்து பப்ஜி மொபைல் கேமை விளையாடியதால் அந்தப் பெண்ணிற்கும், அவரின் கணவருக்கும் பிரச்னை எழுந்துள்ளது. இதையடுத்து பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கும் தொடர்ந்து பப்ஜி விளையாடியதால், அவர்களும் அந்தப் பெண்ணை கண்டித்துள்ளனர். மொபைல் போனையும் அவர்கள் பிடிங்கிக் கொண்டனர். இதனால்தான் அவர் 181 எண்ணிற்கு அழைத்துள்ளார்.
“இந்த விவகாரம் தொடர்பாக அவசரப்பட்டு ஒரு முடிவெடுக்கக் கூடாது என்று அந்தப் பெண்ணிடம் நாங்கள் கூறினோம். தொடர்ந்து அவருக்கு மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. கணவருடன் சேர்ந்து வாழ்வது பற்றி அவருக்கு அறிவுறுத்தினோம்” என்று படேல் மேலும் தகவல்களை கூறினார்.
பப்ஜி விளையாட்டு, மொபைல் போன் பயன்படுத்து பலர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் நேபால், ஈராக், இந்தியாவின் சில பகுதிகளிலும் அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.