உத்தரகாண்ட் மாநிலம், அவ்லியில் ரூ.200 கோடி செலவில் திருமணம் செய்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த குப்தாவின் குடும்பம், திருமணத்தில் ஏற்பட்ட குப்பைகளை அகற்ற ரூ.54,000 டெபாசிட் செலுத்தியுள்ளது.
இந்த ஆடம்ப திருமணத்தில் சேர்ந்த மொத்த குப்பையையும் அகற்றுவதற்கு ஆகும் செலவை ஏற்க தயாராக உள்ளதாக அந்த குடும்பம் தெரிவித்துள்ளது. இதுவரை மட்டும், 150 குவிண்டால் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்த துப்புரவு பணிகளும் முடிந்த பிறகு, குப்பைகளை அகற்றுவதற்கு ஆன மொத்த தொகையையும், வாகன செலவு, தொழிலாளர் கூலி, உள்ளிட்ட இதர செலவுகள் என அனைத்தும் அவருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செலவுகளை ஏற்க தயாராக இருப்பதாக அந்த குடும்பம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதேபோல், குப்பைகளை அகற்ற வாகனம் தர தயாராக இருப்பதாகவும் குப்தா குடும்பம் தெரிவித்துள்ளது. அந்த பகுதிகளில் உள்ள மொத்த குப்பைகளையும் அகற்ற 20 துப்புரவு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் பல மாநில முதல்வர்கள், கத்ரீனா கயிஃப் உட்பட பாலிவுட் பிரபலங்கள், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராம்தேவ், திருமண நிகழ்ச்சியில் 2 மணி நேர யோகா நிகழ்ச்சியும் நடத்தினார். சிறப்பு அழைப்பாளர்களை திருமணம் நடக்கும் இடத்துக்குக் கொண்டு வர ஹெலிகாப்ட்டர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.
இந்த இரண்டு ‘பணக்கார' திருமணங்களையொட்டி, அருகிலிருந்த அனைத்து உணவகங்கள் மற்றும் ரிசார்ட்களில் இருந்த அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. ஸ்விட்சர்லாந்திலிருந்து இந்த திருமணத்தையொட்டி மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
இந்த திருமண நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பல, தற்போது குப்பைகளாக அந்த இடத்திலேயே இருக்கின்றன. அதை அந்த இடத்தில் இருந்து நீக்க 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.