அரியானா சட்டமன்ற தேர்தலில் பிரபல மல்யுத்த வீராங்கனையும், பாஜக வேட்பாளருமான பபிதா போகத் முன்னிலையில் உள்ளார். மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகளில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
பிரபல மல்யுத்த வீராங்கனையான பபிதா போகத்துக்கு இந்த தேர்தலில் சீட் கொடுத்து பாஜக களத்தில் நிறுத்தியது. ஏற்கனவே நன்கு அறியப்பட்ட முகம் என்பதாலும், அவரது குடும்பப் பின்னணி, செயல்பாடுகள் குறித்து மக்கள் ஓரளவு தெரிந்து வைத்ததாலும் மாநிலத்தின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார்.
தாத்ரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பபிதா போகத், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக ஜனதா கட்சியின் வேட்பாளர் சத்பால் சங்வானை விட அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.
அரியானா தேர்தல் முடிவுகள் கட்சிவாரியாக
தேர்தல் முடிவுகள் குறித்து பபிதா போகத் அளித்துள்ள பேட்டியில்,'ஒலிம்பிக்கில் நாங்கள் பதக்கம் வாங்குவதற்கு 4 ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டோம். இன்றைக்கு அதேபோன்ற மன நிலையில் மக்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அவர்களின் மகளான என்னை வெற்றிபெறச் செய்து மக்கள் வாழ்த்துவார்கள் என நம்புகிறேன்' என்றார்.
பிரதமர் மோடி பிரசாரம் செய்த தொகுதிகளில் பபிதா போகத் போட்டியிட்ட தாத்ரி தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.