2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டணி வைத்தனர். கூட்டாக தேர்தலை சந்தித்த அவர்களால், உத்தர பிரதேசத்தில் எதிர்பார்த்த அளவுக்குப் பெரும் வெற்றியைப் பெற முடியவில்லை. இதனால், இருவரது அரசியல் கூட்டணி முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதை உறுதிபடுத்தும் நோக்கில் தேர்தலுக்குப் பின்னர் நடந்த பகுஜன் சமாஜ் கலந்தாய்வுக் கூட்டத்தில், “சொந்த மனைவியின் வெற்றியைக் கூட உறுதி செய்ய முடியாதவர் அகிலேஷ்” என்று விமர்சித்துள்ளார் மாயாவதி.
அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ். இரண்டு முறை எம்.பி-யாக இருந்துள்ள அவர், இந்த முறை உத்தர பிரதேச கனவ்ஜ் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் யாதவ் சமூகத்தினர் மட்டும் சுமார் 3.5 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் ஓட்டு கிடைத்தாலே டிம்பிள் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் டிம்பிளை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர், வெற்றிவாகை சூடினார்.
கனவ்ஜ் தொகுதியில் இந்த முறை தோற்றது சமாஜ்வாடி கட்சிக்குப் பெருத்த அடியாக பார்க்கப்படுகிறது. காரணம், அகிலேஷின் தந்தை முலாயம் சிங் யாதவ், அந்த தொகுயில் 1999 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு அகிலேஷ் அங்கு போட்டியிட்டார். 2012 ஆம் ஆண்டு வரை அவர் அந்த தொகுதியின் எம்.பி-யாக இருந்தார். பின்னர் அவர் உத்தர பிரதேச முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில் டிம்பிள் யாதவ், சுலபமாக வெற்றி பெற்றார். இப்படி தொடர்ந்து வெற்றி பெற்ற வந்த தொகுதியில் இந்த முறை டிம்பிள் தோல்வி கண்டுள்ளார்.
இந்நிலையில் பி.எஸ்.பி உள்கட்சிக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, “நமது வாக்கு யாதவ் சமூகத்தினருக்கு சென்றது. ஆனால், அவர்களின் வாக்கு நமக்கு வரவில்லை. இந்தக் கூட்டணியால் நமக்கு ஒரு பயனும் இல்லை. முஸ்லிம்கள் எங்கு ஓட்டு போட்டார்களோ அங்கு மட்டும்தான் சமாஜ்வாடி கட்சியால் வெற்றி பெற முடிந்துள்ளது. அகிலேஷ் யாதவின் சொந்த குடும்பத்துக்கே யாதவ் சமூகத்தினரின் வாக்குகள் விழவில்லை” என்று கறாராக பேசியுள்ளார்.
இந்த முறை கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த போதும், மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளைக் கூட மாயாவதி - அகிலேஷ் கூட்டணியால் கைப்பற்ற முடியவில்லை.
முதலில் இருந்தே இவர்களது கூட்டணி இரண்டு விஷயங்களை முன் வைத்துதான் உறுதியானது. ஒன்று, உத்தர பிரதேசத்தில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை கூட்டணி கைப்பற்றினால், மாயாவதி பிரதமாவதற்கு அகிலேஷ் உதவ வேண்டும். இதற்கு கைமாறாக உத்தர பிரதேசத்தில் மீண்டும் அகிலேஷ் முதல்வர் ஆக, மாயாவதி உதவி செய்வார் என்பதுதான் அவை. ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், கூட்டணி முறியவே அதிக வாய்ப்புள்ளது.
மாயாவதியின் கருத்து குறித்து சமாஜ்வாடி இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. “எங்களுக்கு அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் வரவில்லை” என்று மட்டும் சமாஜ்வாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.