பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. நேற்று உடல்நிலையில் சற்று அசௌகரியத்தை உணர்ந்த அவர், உடனடியாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக மரணித்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரபலங்கள் பலரும் அவருடைய மரணத்திற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மலையாள நடிகர் பிரித்விராஜ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'சிரஞ்சீவி சர்ஜாவின் திடீர் மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேக்னாவிற்காக நான் பிராத்திக்கிறேன், அவருடைய குடும்பமும் இந்த துக்கத்தில் இருந்து மீண்டுவர வேண்டிக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல நடிகை குஷ்பூ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'இளம் கன்னட நடிகரும், நடிகர் அருஜுனின் மருமகனுமான சிரஞ்சீவியின் மரணம் தன்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டார். திறமைசாலியான அவர் நல்ல முன்னேற்றங்களை கண்டுவந்தர் என்றும், அவருடைய இளம் மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
நடிகை ராஷ்மிக மந்தானா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சிரஞ்சீவியின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்து போனதாகவும், இளம் வயதில் அவர் இறந்தது வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.
சிரஞ்சீவி சர்ஜா, கடந்த 2009ம் ஆண்டு தமிழில் வெளியான சண்டக்கோழி படத்தின் ரீமேக் படமான 'வாயுபுத்ரா' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். சுமார் 10 ஆண்டுகாலமாக திரையுலகில் வலம்வந்த அவர் சம்ஹாரா, ஆத்யா, காக்கி, சின்கா, அம்மா ஐ லவ் யூ, பிரேமா பராஹா, தண்டம் தசகுனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சிரஞ்சீவி சர்ஜா நடிகர் துருவ சர்ஜாவின் சகோதரரும், நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மருமகனும் ஆவார். இவரது தாத்தா சக்தி பிரசாத், ஒரு மூத்த கன்னட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.