தமிழகத்தில் தென் மேற்கு பருவமழைக் காலம் முடிந்துவிட்ட நிலையிலும், மாநிலத்தில் சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம், “தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று, வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கோயம்புத்தூர், சேலம், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவையின் சின்னக்கள்ளர் பகுதியில் அதிகபட்சமாக 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.