This Article is From Aug 02, 2019

’ரேபிடோ பைக் டாக்ஸி ஆப்’ தொடர்ந்து செயல்பட உயர்நீதிமன்றம் உத்தரவு!

இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவருக்கும் காப்பீடு செய்யப்படுவதாகவும், அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

இருசக்கர வாகனங்களை வணிக ரீதியில் பயன்படுத்த தமிழக அரசு விதிமுறைகள் வகுக்கும் வரை, ரேபிடோ பைக் டாக்ஸி ஆப்-ஐ தொடர்ந்து செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட இரு இடங்களுக்கு இடையில் பயணிக்கும் போது, பின் இருக்கைக்கு பயணியை வாடகைக்கு அழைத்துச் செல்லும் வகையில், ரேபிடோ எனும் செயலியையும், இணைய தளத்தையும் தெலங்கானாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் துவங்கியது.

இந்த செயலிக்கும், இணையதளத்திற்கும் தடை விதிக்கக் கோரி கால் டாக்சி ஓட்டுனர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ரேபிடோ செயலிக்கும், இணைய தளத்திற்கும் தடை விதித்து ஜூலை 18ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரேபிடோ நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இருசக்கர வாகனத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் எந்த விதிமுறையும் இல்லை. 

Advertisement

இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவருக்கும் காப்பீடு செய்யப்படுவதாகவும், அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக எச்சரிக்கை பொத்தான் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசுத்தரப்பில் எந்த பதில்மனுவும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

Advertisement

மேலும், ரேபிடோ செயலிக்கும், இணைய தளத்திற்கும் தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

அதேபோல, செயலியை நீக்கும்படி கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு சைபர் குற்றப் பிரிவு உதவி ஆணையர் அனுப்பிய கடிதத்திற்கும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

Advertisement