This Article is From Jan 12, 2019

பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனையை தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1998ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கள்ளச்சாராய விற்பனை தலைவிரித்து ஆடுவதாகவும், அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

அப்போது அரசுப் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் மொத்தம் 108 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இதில், தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் பாலகிருஷ்ண ரெட்டி மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர் மீது ஓசூர் காவல்துறையினர் 147, 148, 332, 353, 434, 307 ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இவ்வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டது. அத்துடன் அவருக்கு 10,500 ரூபாய் அபராதமும் விதித்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், இதில் குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisement

இதையடுத்து, பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பாலகிருஷ்ண ரெட்டி தரப்பு, ‘சிறைத் தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தது.

அதற்கு நீதிமன்றம், ‘இப்போதுதான் மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விசாரணைக்கு முன்னரே எப்படி சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கச் சொல்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியது. மேலும், பிற்பகலுக்கு மேல் இந்த வழக்கில் முக்கிய உத்தரவு வரும் வழங்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டியின் கோரிக்கை மறுக்கப்பட்டு அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


 

Advertisement