மும்பையின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மத்திய ரயில்வேயின் பல ரயில் நிலையங்களிலும் நீர் தேக்கமடைந்துள்ளது. இதனால் புறநகர் ரயில்கள் 15 முதல் 20 நிமிடம் வரை தாமதமாக வருகின்றன. மிகவும் அதிக மழை பெய்துள்ளதால் ரயில்கள், மிதமான வேகத்தில் மட்டுமே இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் மும்பை விமான நிலைய சேவையில் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை. மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அமைப்பு, கடல் சீற்றமுடன் இருக்க வாய்ப்பிருப்பதால் மக்கள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
“இன்று மும்பை கடற்கரையில் சுமார் 4.90 மீட்டர் அளவுக்ககு அலைகள் அடிக்கும். அதே நேரத்தில்தான் நகரத்தில் மிகவும் கனமழை இருக்கும். கனமழை- கடல்சீற்றம் இருப்பது மிகவும் ஆபத்தானது. அதனால் மக்கள் வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி கே.எஸ்.ஹோசாலிக்கர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு கொங்கன் பகுதிகளான மும்பை, தானே, பல்கர் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 4 முதல் 6 மணி நேரத்துக்கு மிக அதிக மழை பொழிவு இருக்கும் என்றும், தானேவில் இருக்கும் அரசு பள்ளிகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே மும்பையில் மிக அதிக மழை பெய்து வருகிறது.
மேலும் படிக்க - "மழை வெள்ளத்தால் நகருக்குள் வந்த முதலை!"