சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோவிலில் நாளை நடை திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து போராடி வரும் அமைப்புகள், சபரிமலை பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு இளம்வயது பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என ஊடகங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளன.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பிற்கு பின், இரண்டாவது முறையாக சபரிமலை கோவில் நாளை நடைதிறக்கப்படும் நிலையில், விஸ்வ இந்து பரிஷத், இந்து ஐக்கியவேதி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் கூட்டமைப்பான சபரிமலை கர்மா சமிதி சார்பில் அனைத்து தொலைக்காட்சி மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த மாதம் 17-ம் தேதி முதல் 5 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறந்திருந்தது. அப்போது சன்னிதானம் செல்லமுயன்ற பெண்களை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தடுத்தனர். இதுதொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஊடகவியலாளர்கள் குவிந்தனர்.
சில செய்தி சேனல்கள் மற்றும் ஊடகங்களின் சார்பில் பெண் நிருபர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ஒருதரப்பினர் தாக்கி வாகனங்களுக்குள் சிறைபிடித்து வைத்ததாக செய்திகள் வெளியாகின.
விசேஷ பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை தரிசனத்துக்காக திறக்கப்படவுள்ளது. பின்னர் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், சபரிமலை பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு இளம்வயது பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என ஊடகங்களுக்கு இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.