This Article is From Jul 12, 2018

வலுக்கும் சசி தரூரின் ‘இந்து பாகிஸ்தான்’ கருத்து சர்ச்சை..!

சசி தரூர், ‘பாஜக மட்டும் வரும் 2019ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், ‘இந்து பாகிஸ்தான்’ உருவாகும்’ என விமர்சனத்தை வைத்தார்

ஹைலைட்ஸ்

  • பாஜக வென்றால் சிறுபான்மையினர் நலன் பாதிக்கப்படும், தரூர்
  • மேலும், 'பாஜக புதிய சட்ட சாசனத்தை எழுதும்' என்றுள்ளார் தரூர்
  • தரூரின் கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும், பாஜக
New Delhi:

காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், ‘பாஜக மட்டும் வரும் 2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், ‘இந்து பாகிஸ்தான்’ உருவாகும்’ என்று காட்டமான விமர்சனத்தை வைத்தார். இது குறித்து பாஜக வட்டாரம் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வரும் நிலைநில் தரூர், ‘என் கருத்துக்கு நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய தரூர், ‘2019 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால், நமது சட்ட சாசனம் இப்போது இருப்பது போன்று கண்டிப்பாக இருக்காது. அவர்களுக்குத் தேவையானபடி சாசனத்தை மாற்றிக் கொள்வார்கள். அந்தப் புதிய அரசியல் சட்ட சாசனம் இந்து ராஷ்டிரத்துக்கு ஏற்றாற் போல் இருக்கும். அது சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கும் வகையில் வடிவமைக்கப்படிருக்கும். அது இந்து பாகிஸ்தானை உருவாக்கும். நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த வீரர்களான காந்தி, படேல், நேரு போன்றவர்களின் கனவு அதுவல்ல’ என்று பேசினார்.

இதற்கு பாஜக தரப்பு உடனடியாக பதிலடி கொடுத்தது. பாஜக-வின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘சசி தரூரின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். பாகிஸ்தான் உருவாவதற்கே காங்கிரஸ் தான் காரணம். தற்போது, இந்தியாவையும் இந்துக்களையும் தலைகுனிய வைக்கும் அளவுக்கு ஒரு கருத்தை சொல்லியுள்ளது காங்கிரஸ்’ என்று கூறினார். 

இதையடுத்து தரூர், ‘இந்து ராஷ்டிரக் கொள்கையைத் தான் பாஜக தூக்கி பிடிக்கிறது. அது அவர்களின் கட்சி கொள்கையிலேயே இருக்கிறது தானே. பிரதமர் மோடி, அவரது கட்சியினரை தீனதயால் உபாத்யாவின் கருத்துகளை படிக்குமாறு வலியுறுத்துகிறார். உபாத்யாவுக்கு அரசியல் சட்ட சாசனத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை. அவர்களின் தலைவர்கள் சாசனமும் தேசமும் இந்துக்களுக்காக மட்டும் கட்டப்பட வேண்டும் என்று நம்பியவர்கள். இந்தக் கருத்துகளை பிரதமரே மறுத்ததில்லை. எனது கருத்து தான் ராகுல் காந்தியின் கருத்தாகவும் இருக்கும். இதே கருத்தை அவர் கடந்த 2013 ஆம் ஆண்டே சொல்லியுள்ளார்’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

.