This Article is From Dec 28, 2018

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Advertisement
Tamil Nadu Posted by

கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரத்தில் 4 வாரத்திற்குள் மத்திய, மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி என்பதால் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பது உறுதி செய்யப்படவில்லை. குழந்தை பிறந்த பிறகுதான் அதற்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த 3-ம் தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு செலுத்தப்பட்டது எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம்தான் என அந்தப் பெண்ணுக்கு தெரியாது.

Advertisement

பின்னர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக ரத்தம் கொடுத்த அந்த இளைஞர் சோதனை செய்த போது தான் தெரியவந்தது, அவருக்கு எச்.ஐ.வி உள்ளது என்பது. இதைத்தொடர்ந்து அந்த கர்ப்பிணியின் ரத்தத்தை சோதனை செய்த போது அவருக்கும் எச்.ஐ.வி. பாசிட்டிவ் என தெரியவந்தது.

இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, சாத்தூர் வாலிபர் ரத்ததானம் செய்வதற்கு முன்பு அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisement

இதற்கிடையே பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவரும், அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். தொடர்ந்து கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது வயிற்றில் இருக்கும் குழந்தைககு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் தடுப்பதற்காக சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து மாநில மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

இன்னும் 4 வாரத்திற்குள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் ரத்த மாதிரிகளை மறு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மறு ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளது.


 

Advertisement