This Article is From Jun 15, 2020

டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அமித்ஷா அழைப்பு விடுப்பு!

நொய்டா மற்றும் காஜியாபாத்தை விட டெல்லியில் 40 சதவிகித கொரோனா நோயாளிகள் இருப்பதால் டெல்லியையும், உத்தர பிரதேசத்தையும் இணைக்கும் சாலைகள் மூடப்படும் என உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அமித் ஷா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பை நடத்தினர்.

ஹைலைட்ஸ்

  • அமித்ஷா அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
  • தொற்று பரவல் தடுப்பு முறை குறித்து மறு ஆய்வு
  • ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், பாஜக, பகுஜன்சமாஜ் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.32 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், தேசிய தலைநகர் டெல்லியில் தொற்று பரவல் எண்ணிக்கையானது 41 ஆயிரத்தினை கடந்துள்ளது. இந்நிலையில் முன்னதாக உச்ச நீதிமன்றம் டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகள் நடத்தப்படும் விதம் குறித்து தனது விமர்சனத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து, மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி மற்றும் மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். காலை 11 மணியளவில் நடைபெறவிருக்கும் இந்ந கூட்டத்தில், ஹரியானா, உத்தர பிரதேசம், ஆகிய மாநில எல்லை பகுதிகளிலும், டெல்லியிலும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு முறை குறித்து மறு ஆய்வு முறைகள் சம்பந்தமாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும். இந்த கூட்டத்தில், டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், பாஜக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

நொய்டா மற்றும் காஜியாபாத்தை விட டெல்லியில் 40 சதவிகித கொரோனா நோயாளிகள் இருப்பதால் டெல்லியையும், உத்தர பிரதேசத்தையும் இணைக்கும் சாலைகள் மூடப்படும் என உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதேபோல டெல்லியுடன் மாநில எல்லையை கொண்டுள்ள ஹரியானா, டெல்லி மற்றும் புறநகரங்களில் பயணிப்பதற்கு எவ்வித தடையும் இல்லையென தெரிவித்திருந்தது.

முன்னதாக நேற்று, அமித்ஷா, கெஜ்ரிவால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஆகியோர் கொரோனா தடுப்பு குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர். “500 படுக்கை வசதிகளை கொண்ட கொரோனா சிகிச்சைக்கென தயாரிக்கப்பட்ட சிறப்பு ரயில் பெட்டிகளை வழங்குவது, தொடர்பு தடமறிதல் மற்றும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது“ என கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை அமித்ஷா தெரிவித்திருந்தார்.

.