Read in English
This Article is From Sep 14, 2018

“மல்லையா தப்பிச் சென்ற நாளில் சிபிஐ இயக்குனர் மும்பையில்தான் /இருந்தார்” – புதிய தகவல்கள்

மல்லையா கடந்த 2016 மார்ச் 3-ம்தேதி இங்கிலாந்து செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

Advertisement
இந்தியா
New Delhi:

மும்பையில் இருந்து தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றதும், அதே நேரத்தில் அப்போதைய சிபிஐ இயக்குனராக இருந்த அனில் சின்ஹா மும்பை விமான நிலையத்திற்கு வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மல்லையா கடந்த 2016 மார்ச் 3-ம்தேதி இங்கிலாந்து செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, நீண்ட நாட்களுக்கு தங்கும் வகையில் அவரது லக்கேஜ்கள் இருந்தன. இதைப் பார்த்த இமிகிரேஷன் அதிகாரிகள் சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மும்பையில் மற்றொரு நிகழ்ச்சியில் சிபிஐ இயக்குனர் பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில், மல்லையா தப்பிச்சென்ற அதே நாளில் மும்பை ஓட்டல் ஒன்றில் வங்கி தலைவர்களின் கூட்டத்தில் சிபிஐ இயக்குனர் பங்கேற்றிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் மகாராஷ்டிர முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவீசும் பங்கேற்றிருக்கிறார்.

அப்போதுதான் மல்லையா வெளிநாடு தப்பிச் சென்ற தகவல் வெளியானது. இதை அறிந்த வங்கிகளின் தலைவர்கள் அதிர்ச்சியுற்றனர். இதன்பின்னர்தான் மல்லையாவை பிடிப்பதற்கான பணிகளை சிபிஐ தீவிரப்படுத்தியது. ஆனால் அதற்குள்ளாக அவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவத்திற்கு பதிலளித்துள்ள சிபிஐ, மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளது.

மல்லையா விவகாரத்தில் சில விதிமீறல்கள் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

விமான நிலையத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்வது தொடர்பாக 2 நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. முதல் வகை என்பது, குற்றம் சாட்டப்பட்டவர் விமான நிலையத்திற்கு வந்தால் அவரை கைது செய்வது தொடர்பாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது, இரண்டாவது வகை என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது அவரது வருகையை குறித்துக் கொள்வதாகும். இந்த நோட்டீசை பொருத்தவரை குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய வேண்டும் என்கிற அவசியம் இதில் இல்லை.

இதன்படி மல்லையா கைது விவகாரத்தில் சில விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ரூ. 9000 கோடி கடன் மோசடி வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவரை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது சம்பந்தமாக இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் மல்லையாவை இந்தியா கொண்டு வருவது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இதில் டிசம்பர் மாதம் இறுதித் தீர்ப்பு வெளியாகிறது.

Advertisement
Advertisement