சில நாட்களாக உலகை உலுக்கி வரும் சம்பவங்களில் ஒன்று சர்வதேச அளவில் நடந்து வரும் பருவநிலை மாற்றத்துக்கு (climate activism) எதிரான போராட்டம்தான். அந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தி வருபவர் க்ரெட்டா தன்பெர்க் (Greta Thunberg) என்னும் 16 வயதுச் சிறுமி. அவர் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை உலக வைரலாகி, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அவர் உலக நாடுகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் "How Dare You?" என்ற கேள்வியை முன்வைத்து கலங்கடித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர், பருவநிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதபோது, ‘விஞ்ஞானிகளின் உரைகளைக் கேளுங்கள்' என்று வலியுறுத்திய அவர், ஐ.நா சபையிலும் அதையேதான் கூறியுள்ளார். தனது உரை முழுவதும் உலகத் தலைவர்களையும், அவர்கள் கொண்டு வரும் கொள்கைகளையும் விமர்சித்த கிரெட்டா, உடனடியாக பருவநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பேரழிவு ஏற்படும் என்று எச்சரித்தார்.
ஐ.நா சபையின் காலநிலை உச்சி மாநாட்டில் (U.N. climate summit) மிகவும் உணர்ச்சிகரமாக பேசிய கிரெட்டா, “நீங்கள் செய்யும் அனைத்தும் தவறாகவே உள்ளது” என்று பருவநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத உலகத் தலைவர்களை சாடினார். சுவீடனைச் சேர்ந்த கிரெட்டா, கடந்த ஓராண்டுக்கு முன்னர் முழு நேர போராட்டம் செய்வதற்காக பள்ளி செல்வதை நிறுத்திக் கொண்டார்.
அமெரிக்காவில் நடந்த ஐ.நா மாநாட்டில் பேசிய கிரெட்டா, “நான் இங்கு இருக்கக் கூடாது. நான் இப்போது பள்ளியில் இருக்க வேண்டும். ஆனால், பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை நீங்கள் அனைவரும் என்னைப் போன்ற இளைஞர்களிடம் நம்பிக்கையை எதிர்பார்த்து வருகிறீர்கள். ஹவ் டேர் யூ (How Dare You?)” என்று தகித்தார்.
கடந்த வெள்ளிக் கிழமை உலக அளில் பல லட்சம் இளைஞர்கள் சர்வதேச அளவில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். நியூயார்க்கில் இருந்த கிரெட்டா, அங்கிருக்கும் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து போராட்டத்தை வழி நடத்தினார்.
ஐ.நா உரையில் தொடர்ந்து பேசிய கிரெட்டா, “எனது கனவுகளை நீங்கள் பறித்துக் கொண்டீர்கள். உங்களின் வெற்று வாக்குறுதிகளால் என் குழந்தைப் பருவத்தை களவாண்டுவிட்டீர்கள். மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். மொத்த சுற்றுச்சூழலும் அழிந்து வருகிறது. மிகப் பெரும் அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம். ஆனாலும் நீங்கள் பேசுவதை பணத்தைப் பற்றித்தான். பொருளாதார வளர்ச்சி பற்றித்தான் பேசுகிறீர்கள். ஹவ் டேர் யூ?
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விஞ்ஞானிகள் பருவநிலை மாற்றம் குறித்து தெளிவாக எடுத்துரைத்து வருகிறார்கள். ஆனாலும் அது குறித்து தீர்க்கமான முடிவையோ, தீர்வையோ நீங்கள் எடுக்கவில்லை. எங்களின் கோரிக்கைகளை, எங்களின் குரலை நீங்கள் கேட்பதாக சொன்னாலும் உங்களை நம்ப நான் தயாராக இல்லை.
நீங்கள் எங்களை கைவிட்டு வருகிறீர்கள். ஆனால் உங்களின் துரோகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்கிறார்கள். அனைத்து வருங்கால சந்ததியினரின் பார்வையும் உங்கள் மீதுதான் உள்ளன. எங்களை கைவிட்டீர்கள் என்றால், உங்களை நாங்கள் என்றும் மன்னிக்க மாட்டோம்” என்று எச்சரித்தார்.
கிரெட்டாவின் உணர்ச்சிமிக்க உரைக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வரவேற்று பாராட்டியுள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)