This Article is From Jul 04, 2019

“அணி மாறும் அமமுக நிர்வாகிகள்… சசிகலாவின் ரியாக்‌ஷன் என்ன..?”- தினகரன் ஓப்பன் டாக்

மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே, தினகரனின் நம்பிக்கையாக திகழ்ந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார்

“அணி மாறும் அமமுக நிர்வாகிகள்… சசிகலாவின் ரியாக்‌ஷன் என்ன..?”- தினகரன் ஓப்பன் டாக்

தங்க தமிழ்செல்வனும் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார்

ஹைலைட்ஸ்

  • நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை
  • சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அமமுக, அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது
  • அமமுக-விலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர்

அதிமுக-வில் இருந்து டிடிவி தினகரனையும், சசிகலாவையும் நீக்கிய பிறகு, அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக, செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் இருந்து வந்தனர்.

ஆனால், மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே, தினகரனின் நம்பிக்கையாக திகழ்ந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். தொடர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். இதனிடையே, அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்த தங்க தமிழ்செல்வன், நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை எதிர்த்து, அமமுக சார்பில் களமிறக்கப்பட்டார்.

ஆனால், இத்தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வி அடைந்தார் தங்கம். இதையடுத்து, அவர் மீண்டும் அதிமுக-வுக்கே செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், தங்க தமிழ்செல்வனும் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார். 

இதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் அமமுக வளர்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த இசக்கி சுப்பையா அமமுக-வில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாயின. இவர், மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென்சென்னை வேட்பாளராக களமிறங்கியவர் ஆவார்.  

இதைத்தொடர்ந்து, நெல்லையில் சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த இசக்கி சுப்பையா, டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் தனக்கு மனவருத்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார். சுயலாபம் பார்ப்பதாக இருந்தால் அமமுகவில் சேர்ந்தே இருக்க மாட்டேன் என்று கூறிய அவர், தற்போது அமமுக-வில் இருந்து விலகுவதாக அறிவித்ததார்.

தொடர்ந்து, ஜூலை 6-ஆம் தேதி முதலமைச்சர் முன்னிலையில் 20,000 பேருடன் அதிமுக-வில் இணைவதாக தெரிவித்த அவர், தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இப்படி, அமமுக-வின் முக்கிய நிர்வாகிகள் விலகுவதால் சசிகலா தரப்பு மிகவும் உஷ்ணமாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த தினகரனிடம், அது குறித்து கேட்கப்பட்டது. “சசிகலா ஒன்றும் அரசியலுக்கு நேற்று வரவில்லை. அவர் அம்மாவுகடன் 30 ஆண்டுகள் அரசியலில் பயணித்தவர். ஒரு அமைப்போ கட்சியோ தேர்தலில் தோல்வியடைந்தால், சிலர் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்று அவருக்குத் தெரியும். ஒரு சிலர் விலகுவதால் பலமான அமைப்பு கொண்ட கட்சி பலவீனப்பட்டு விடாது. அதற்குக் காலம் தக்க பதில் சொல்லும்” என்று கூறிவிட்டு ஜூட் விட்டார். 

.