இந்த ஆண்டுக்கான நோபல் (Nobel) விருதை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி (Abhijit Banerjee), எஸ்தல் டுஃப்லோ மற்றும் மைக்கெல் கிரீமெருடன் இணைந்து பெற்றுள்ளார். இதில் பானர்ஜி, சமீபத்தில் இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) பற்றி மிகவும் கறாரான சில விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
சமீபத்தில் ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் பானர்ஜி பேசுகையில், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அமல் செய்ததை கடுமையாக விமர்சித்தார்.
“இந்தியாவில் உள்ள எனது தொழில் செய்யும் நண்பர்களுடன் நான் பேசும்போது, அங்கு முதலீடு செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக சராசரி நுகர்வு என்பது குறைந்து கொண்டே வருகிறது. இதைப் போல ஒரு நிலைமை கடந்த பல்லாண்டுகளாக நடந்ததே இல்லை. 1970-களில் இதைப் போன்ற ஒரு நிலைமை இருந்தது. இது மிகவும் ஆபத்தானது.
கிட்டத்தட்ட 75 சதவிகித முதலீடுகள் குறைந்துவிட்டன. ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. இது மிகப் பெரும் பிரச்னை” என்று பேசினார் பானர்ஜி.
அவர் மேலும், “பொருளாதாரத்தை மேலும் பாதிப்பது பொருட்களின் தேவை. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி முறை போன்றவை பணவீக்கத்தை மேலும் அதிகரித்துள்ளது” என்று எச்சரித்தார்.
முன்னதாக காங்கிரஸின் ராகுல் காந்தி, “அபிஜித், இந்தியாவில் வறுமையை ஒழித்து பொருளாதாரத்தை வளர்க்கும் நியாய் திட்டத்தை வடிவமைக்க உதவியவர் . ஆனால், தற்போது நம்மிடம் இருப்பது எக்கனாமிக்ஸ் அல்ல, மோடினாமிக்ஸ். இது பொருளாதாரத்தை ஒழித்து வறுமையை வளர்க்கிறது” என்று ட்வீட்டினார்.
பாஜக தரப்பினரும், அபிஜித்திற்கு எந்தவித பாராட்டுச் செய்தியையும் தெரிவிக்காததால், மத்திய அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன.
பிரதமர் நரேந்திர மோடி, அபிஜித்திற்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்த பின்னர்தான் மற்றவர்களும் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டனர்.
1961 ஆம் ஆண்டு பிறந்த அபிஜித் பானர்ஜி, கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திலும் பயின்றார். 1988 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றர் பானர்ஜி. மிகவும் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, பானர்ஜியின் மனைவி ஆவார்.