பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரராக இருந்த இம்ரான் கான் அரசியல் களம் கண்டு தேர்தலில் வெற்றி பெற்று தற்போது பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவியேற்பு விழாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து சென்றிருந்தார்.
அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியை கைகுலுக்கி, சித்து ஆரத் தழுவினார். எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை தாக்கி வரும் நிலையில், சித்துவின் இந்த செயல் பரவலாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் இந்திய மகளிர் பத்திரிகையாளர் நிறுவனத்தின் சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது சித்து விவகாரம் குறித்து பேட்டியளித்த அவர், பாகிஸ்தான் ராணுவ தளபதியை ஆரத் தழுவியதால் இந்தியாவில் ராணுவ வீரர்களின் ஆதரவையும், இந்திய மக்களின் ஆதரவையும் சித்து இழந்து விட்டார். இந்த செயலை அவர் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.