டெல்லி ஜா.ஃப்ராபாத் மெட்ரோ நிறுத்தத்திற்கு அருகில், குடியுரிமை திருத்தச் சட்டத்தினை எதிர்த்து பெண்கள் நேற்று இரவு இந்தப் போராட்டத்தினை தொடங்கியிருக்கின்றனர்.
தில்லி காவல் துறையின் இன்று காலை தகவலின்படி, 1500 பெண்கள் வடகிழக்கு டெல்லியில் ஜாஃப்ராபாத்தில் உள்ள ஒரு முக்கிய சாலையை அடைத்திருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், இட ஒதுக்கீடு குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து நாடு முழுவதும் முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர் ஆசாத் அறிவிப்பிற்குப் பெண்கள் ஆதரவளித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. அவர்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளைக் காவல் துறையினர் மேற்கொண்டிருக்கிறார்கள்.
நேற்றைய இரவில் 200 பெண்கள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆசாதி முழக்கமிட்டு போராட்டத்தினை தொடங்கினர். இந்த நிலையில் அவர்கள் கைகளில் தேசியக் கொடிகளையும், குழந்தைகளையும் ஏந்தியிருந்தனர். நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிலிருந்து விடுபட விரும்புவதாக அவர்களுள் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இந்த போராட்டம் காரணமாக ஜா.ஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் இன்று காலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
“நாங்கள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அதன் காரணமாக அவர்கள் வெளியேறி வருகிறார்கள். இது போன்ற பெரிய சாலைகளை அவர்களால் தடுத்துவிட முடியாது. மேலும் நாங்கள் பாதுகாப்பிற்காகத் துணை ராணுவப் படையினை அழைத்துள்ளோம்.” என்று அந்த பகுதியிலிருந்த மூத்த காவல் துறை அதிகாரியான தேவ் பிரகாஷ் சூர்யா இன்று காலை தகவல் தெரிவித்திருக்கிறார்.
ஹாகின் போராட்டத்தினையடுத்து தற்போது தேசிய தலைநகரில் உருவாகியுள்ள மற்றொரு போராட்டம் இதுவேயாகும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஹாகின் பாக்கில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக நொய்டாவுன் இணைக்கும் சாலை ஒன்று 70 நாட்களுக்குப்பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கைகளில் நீல நிற பட்டையுடன் பெண்கள் ஜெய் பீம் என்று முழங்கினர். இந்த போராட்டத்திற்குச் சந்திர சேகர் ஆசாத் இன்று தலைமை தாங்குவார் எனத் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த 9-ம் தேதி இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை ஒட்டியுள்ள மூன்று இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகளிலுள்ள சிறுபான்மையினருக்கு இந்தியா குடியுரிமை வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தாலும், விமர்சகர்கள் இதனை முஸ்லீம் எதிர்ப்பு என்றே அழைக்கின்றனர்.