This Article is From Jul 17, 2019

கல்விக்கொள்கை குறித்து பேசுவதற்கு சூர்யாவிற்கு உரிமை உண்டு: ஆதரவு கரம் நீட்டும் கமல்!

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்ட வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கின்றது.

தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு.

Chennai:


கல்விக்கொள்கை குறித்து பேசுவதற்கான உரிமை நடிகர் சூர்யாவிற்கு உண்டு என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சூர்யாவுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார். 

அகரம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா அதில் பேசுகையில், மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார்கள். 

அதேபோல குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்திருப்பது சரியல்ல. அந்த பள்ளிகளை தரம் உயர்த்தாமல் பள்ளிகளை மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைத்தேர்வு நடத்துவது ஏன்?

எல்லோரும் அமைதியாக இருந்தால் இது நிச்சயம் திணிக்கப்படும். எனவே புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என்றார். 

சூர்யாவின் இந்த விமர்சனம் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு பெரும்பாலான ஆளும் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றர். அந்த வகையில் சூர்யாவின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,

புதிய கல்விக் கொள்கை குறித்து நன்கு தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். ஆனால் எதுவும் தெரியாமல் பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்? புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா அரை வேக்காட்டுத்தனமாக பேசுகிறார் என கடுமையாக விமர்சித்தார். 

இதேபோல், புதிய கல்விக்கொள்கை குறித்து பேசிய நடிகர் சூர்யாவை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையும் கடுமையாக விமர்சித்தார். கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா? தங்கள் படத்தின் விளம்பரத்திற்காகவும், அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறீர்களா? என்று அவர் விமர்சித்திருந்தார். 

முன்னதாக, புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த குழுவானது, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது. அதில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்தது. 

அதன்படி, மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல், இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது. மேலும், விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என திருத்தப்பட்ட வரைவுக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது,  ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்து தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்ட வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.

.