This Article is From Nov 01, 2018

“இலங்கை பிரதமர் நான்தான்” – என்.டி.டீ.வி.-க்கு ரனில் விக்ரமசிங்கே சிறப்பு பேட்டி

இலங்கையில் பிரதமர் பதவியில் மஹிந்திர ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தான் இன்னும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படாத வரை நான்தான் இலங்கை பிரதமர் என்கிறார் ரனில்.

Colombo:

இலங்கையில் கடந்த சில வாரங்களாக அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அந்நாட்டின் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனவுக்கும் இடையே காணப்பட்ட மோதலில், ரனில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக மஹிந்திர ராஜபக்ச பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இதற்கிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் நாடாளுமன்றத்தையும் அதிபர் சிறிசேன முடக்கியுள்ளார். இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கே என்.டி.டீ.வி.-க்கு சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது-

இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர்தான் பிரதமராக இருக்க முடியும்.

அப்படிப்பார்த்தால் நான்தான் இலங்கையின் பிரதமர். நாடாளுமன்றத்தில் எனக்கு எதிராக பெரும்பான்மை நிரூபிக்கப்படாத வரை நான்தான் பிரதமராக இருக்க முடியும்.

இலங்கையை பொறுத்தவரைக்கும் தற்போது அரசு என்று ஏதும் இல்லை. சட்டப்படி இங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. இலங்கையை பொறுத்தவரைக்கும் இப்போதைக்கு 2 பிரதமர்கள் இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் உள்ளனர் அவர்களில் 104 பேர் ரனிலின் ஆதரவாளர்கள். 99 பேர் ராஜபக்சேவை ஆதரிக்கின்றனர். மீதமுள்ள 22 பேர் ரனிலுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அதிபர் சிறிசேன நவம்பர் 16-ம் தேதி வரைக்கும் நாடாளுமன்றத்தை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும் ரனில் தனது அரசு இல்லத்தை விட்டு காலி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.