பொருளாதார நிலை குறித்து மட்டுமே கவலை கொள்கிறேன் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில், திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது ரோஸ் அவென்யூ சிறப்பு நீதின்றம்.
இந்த உத்தரவின்படி 74 வயதாகும் சிதம்பரம், வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை சிறையில் வைத்து விசாரிக்கப்படுவார். முன்னதாக சிபிஐ அமைப்பு, சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்தது. அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது.
இதனிடேய, நீதிமன்றத்தில் இருந்து ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அழைத்துச்சென்ற போது, செய்தியாளர்களை பார்த்து, 'பொருளாதார நிலை குறித்து மட்டுமே கவலை கொள்கிறேன்' என்று கூறி சென்றார்.
முன்னதாக இதேபோல், டெல்லி நீதிமன்றத்தில் இருந்து ப.சிதம்பரத்தை வெளியே அழைத்துச் சென்றபோது, செய்தியாளர்களை பார்த்து 'ஐந்து விரல்களையும் காண்பித்து 5 சதவீதம்' என்றார்.
என்ன ஐந்து சதவீதம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ஜிடிபி 5 சதவீதம் என பதில் அளித்தார். கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாக குறைந்திருப்பதை குறிப்பிடும் வகையில் அவ்வாறு கூறி சென்றார்.
முன்னதாக நீதிமன்றக் காவல் கோரப்பட்டதற்கு, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தார். அவர், அமலாக்கத் துறை கைதுக்கு சிதம்பரம் தயார் என்றும் சிறையில் அடைக்கப்படக் கூடாது என்றும் வாதிட்டார்.
“அமலாக்கத் துறைக்கு வேண்டுமென்றால் நான் அவர்களின் கஸ்டடிக்கு செல்லத் தயார். ஆனால் நீதிமன்றக் காவலுக்கான அவசியம் என்ன இருக்கிறது. நான் சரணடைகிறேன். அல்லது, அமலாக்கத் துறை என்னைக் கைது செய்யட்டும். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்று வழக்கு விசாரணையின்போது சிதம்பரம் கூறினார்.
ஆனால் சிபிஐ தரப்போ, “குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர், மிகவும் சக்திவாய்ந்தவர் ஆவார். எனவே, அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட வேண்டும்.” என்று பதிலடி கொடுத்தது.
கடந்த 15 நாட்களாக சிதம்பரம் சிபிஐ கஸ்டடியில்தான் இருந்தார். அவர் டெல்லியில் இருக்கும் சிபிஐ அலுவலகத்தின் தரைத் தளத்தில் உள்ள அறையில்தான் தங்கியிருந்தார்.
ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது