தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் மூன்று முதலமைச்சர்கள் விரைவில் விடுதலை பெறத் தான் பிரார்த்தனை செய்வதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சனிக்கிழமை தெரிவித்திருக்கிறார். மேலும் மேற்குறிப்பிட்ட மூவரும் காஷ்மீரின் அமைதிக்கு உதவுவதாகத் தான் நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த ஆகஸ்டு 5 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தினை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மோடி அரசாங்கம் மறு சீரமைப்பு செய்ததைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமாகிய ஃபரூக் அப்துல்லா அவரின் மகனான உமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முஃப்தி ஆகியோரோடு சேர்த்து டஜன் கணக்கான அரசியல்வாதிகள் தடுப்பு காவல் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் விடுவிக்கப்பட்டாலும் மேற்குறிப்பிட்ட மூன்று முன்னாள் முதலமைச்சர்களும் சில குறிப்பிட்ட அரசியல்வாதிகளும் தொடர்ந்து காவல் வைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.
இதில் ஃபரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பரில் வழக்குப் பதியப்பட்டிருந்தது. மற்ற இரு முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா மெகபூபா முஃப்தி மீதும் இதே வழக்குகள் பதியப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்வதற்கு முன்பாக மேற்குறிப்பிட்ட மூவரும் வெளியிட்ட வெறுப்பூட்டும் அறிக்கைகளே இதற்குக் காரணம் என அரசு தரப்பிலிருந்து குறிப்பிடப்படுகிறது.
சனிக்கிழமை ஐ.என்.எஸ். க்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் “ஜம்மு காஷ்மீரின் நிலைமை அமைதியானது. இந்த நிலைமை வேகமாக முன்னேறி வருகிறது. முன்னேற்றத்துடன் தடுப்பு காவலில் உள்ள அரசியல்வாதிகளை விடுதலை செய்யும் முடிவுகள் குறித்தும் இறுதி செய்யப்படும். மேலும் அரசாங்கம் யாரையும் துன்புறுத்தவில்லை.” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்தின் முடிவினை பாதுகாக்கவும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் நலனுக்காகவும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றும் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டிருந்தார்.
தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கக்கூடிய ஃபரூக் அப்துல்லா உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி ஆகியோர்கள் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்வதாகவும் அவர்கள் வெளியில் வந்தபின் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக உழைக்கவும் தான் பிராத்திப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
நரேந்திர மோடி அரசாங்கத்தின் முந்தைய ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் இருந்த போது பிரதமரின் நேர்மையையும் கருணையையும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.