இந்தியன் 2 விபத்து தொடர்பாக எனக்குத் தெரிந்த விவரங்களை காவல்துறைக்கு எடுத்துச் சொன்னேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்.19ம் தேதியன்று 'இந்தியன் 2' படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வழக்கை விரைந்து விசாரித்து வருகின்றனர். இதற்காகப் படப்பிடிப்பிலிருந்த இயக்குநர் சங்கர், கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த விசாரணையில் சங்கர் ஏற்கனவே ஆஜராகிவிட்டார். இந்நிலையில் இன்று விசாரணைக்காக கமல்ஹாசன் இன்று நேரில் ஆஜரானார். பின்னர் விசாரணை முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது, சகோதரர்களுக்கு நான் சொல்லும் கடமையாக இங்கே காவல்துறையில் எனக்குத் தெரிந்த விவரங்களை எடுத்துச் சொல்வதற்காக வந்தேன்.
எங்கள் துறையில் இதுபோன்ற விபத்துகள் இனி நிகழக்கூடாது என்பதற்காகவும் நாங்கள் எடுக்கும் முயற்சியின் முதல் கட்ட முயற்சியாகவே இந்தச் சந்திப்பைக் கருதுகிறேன். நேற்று திரையுலகைச் சார்ந்தவர்கள் என்னுடைய அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் அனைவரிடமும் இதுகுறித்துப் பேசினேன்.
இனி இதுபோன்று நடக்காமல் இருக்க காவல்துறை தரப்பில் ஏதாவது பரிந்துரைகள் இருப்பின் தெரிவிக்கலாம். அதையும் நாங்கள் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளோம். கூடிய விரைவில் எங்கள் துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் சந்திக்க இருக்கிறோம். அது குறித்த விவரங்களை நான் உங்களுக்குக் கண்டிப்பாகச் சொல்வேன் என்று அவர் கூறினார்.