விங் கமாண்டர் அபிநந்தன் ஜம்மு காஷ்மீரில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை விமானப்படை மேற்கொண்டிருக்கிறது.
அவர் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் விமானப்படை தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அபிநந்தனுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு விட்டதாகவும், அவர் விரைவில் புதிய பணியிடத்திற்கு செல்வார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகில் மிக் 21 ரக போர் விமானத்தில் இருந்து எஃப்.-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஒரே நபர் அபிநந்தன் ஆவார். கடந்த பிப்ரவரி 27-ம்தேதி இந்த சம்பவம் நடந்தது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் கடந்த பிப்ரவரி 27-ம்தேதி அழிக்கப்பட்டன. அப்போது நடந்த ராணுவ தாக்குதலில் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கினார்.
மத்திய அரசின் முயற்சியை தொடர்ந்து நாடு திரும்பிய அபிநந்தனுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.