கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில், அவர்களின் வீட்டில் இருக்கும் குழியில் இறந்து கிடந்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் வசித்து வந்த, கிருஷ்ணன், சுசிலா அவர்களது பிள்ளைகள் அர்ஷா மற்றும் அர்ஜுன் ஆகியோரை கடந்த சில நாட்களாக பார்க்கவில்லை என்று அக்கம் பக்கத்தினர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், நேற்று கிருஷ்ணன் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள், கிருஷ்ணன் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். வீட்டின் சில இடங்களில் ரத்தக் கரை இருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து போலீஸ், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. கிருஷ்ணன் வீட்டிலிருந்த ஒரு சுத்தி மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்து போலீஸ், ‘குடும்பத் தலைவரான கிருஷ்ணனுக்கு ரப்பர் தோட்டம் இருந்துள்ளது. அதே நேரத்தில் மாந்திரீகத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார் என கண்டுபிடித்துள்ளோம். இதுவரை கொலைக்கான காரணம் குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறோம். மாந்திரீகத்தின் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினருடன் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக் கொண்டதில்லை என்று தெரிகிறது’ என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
நால்வரின் உடலும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.