மெக்சிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 311 பேரை இந்தியாவுக்கு மெக்சிகோ அரசு அனுப்பவுள்ளது. இவர்கள் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக புக முயன்றவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
311 பேரும் டோலுகா சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போயிங் 747 ரக விமானத்தின் மூலமாக டெல்லிக்கு கொண்டு வரப்படவுள்ளனர்.
மெக்சிகோவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் ட்ரம்ப் அரசுதான் முக்கிய காரணம். ஏனென்றால் கடந்த ஜூன் மாதம் மெக்சிகோவை எச்சரித்த ட்ரம்ப், அமெரிக்கா – மெக்சிகோ எல்லையை கண்காணித்து சட்டவிரோதமாக உள்ளே வருபவர்களை மெக்சிகோ தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபெயரும் மக்களால் அந்நாட்டிற்கு அதிக ஆபத்து ஏற்படுவதாக ட்ரம்ப் அரசு கருதுகிறது. இதனால்,முறயான குடியுரிமை இல்லாதவர்கள் மீது கடும் நடவடிக்கையை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளது.
மெக்சிகோ அரசு வெளியேற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.