ரோமின் அப்பியோ லேட்டினோ மாவட்டத்தில் ஒரு அசாத்திய சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கட்டட்டத்தின் மூன்றாவது மாடியில் இருந்த ஒரு நபர், தப்பிக்க முயன்றுள்ளார். காட்டுத் தீ போல, கட்டடம் முழுவதையும் ஆக்கிரமித்தது நெருப்பு. இதனால் வேறு வழியின்றி ஜன்னல் வழியே கட்டடத்தின் விளிம்பிற்கு வந்துள்ளார். அங்கிருந்து கீழே குதித்தால் எப்படியும் பிழைக்க முடியாது என்று யூகித்த அவர், அப்படியே விளிம்பில் படுத்துக் கொண்டார். 30 சென்டி மீட்டர் கூட அகலம் இல்லாத அந்த விளிம்பில் அவர் எப்படி சாமர்த்தியமாக படுத்தார் என்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெகு நேரம் அவர் அங்கேயே படுத்துக் கொண்டிருக்க, கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீ பரவியது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அந்த நபரை க்ரேன் உதவி கொண்டு பத்திரமாக மீட்டுள்ளனர். எந்தவிதக் காயமும் அவருக்கு ஏற்படவில்லை என்றும் அதே நேரத்தில் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இதைப் போன்ற ஒரு தீ விபத்து சம்பவம் சீனாவில் ஏற்பட்டது. அப்போதும் 19 வயது நபர் ஒருவர் க்ரேன் உதவி கொண்டு பலரை காப்பாற்றினார். அவரின் செயலை பலரும் பாராட்டினர்.