சென்னை(Chennai) அசோக்நகரில் அமமுகவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் அமமுக(AMMK) பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பதவியேற்றார். தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்(TTV Dhinakaran), சசிகலாவிடம்(Sasikala) ஆலோசனை செய்த பிறகு தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சசிகலாவுக்காக அமமுகவில் தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
எதிர்காலத்தில் சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை(ADMK) கைப்பற்றினால் அக்கட்சியை அமமுக உடன் இணைப்போம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாணப் பத்திரம் பெற்றுள்ளோம்.
சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர்.
இதனால் வரும் 22-ம் தேதி நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.