43 சுங்கச்சாவடிகளில் 20ல் மட்டும் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கவரிக் கட்டணம் 3 முதல் 5 சதவீதம் உயர்கிறது என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் 20ல் மட்டும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கவரிக்கட்டணம் மாற்றிமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் இந்த கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
உதாரணத்திற்கு கார் போன்ற வாகனங்களுக்கு ரூ.55 வசூலிக்கப்பட்டது, இனி 60 ரூபாயாக உயரும். இலகு ரக வாகனங்களுக்கு ரூ.90 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 95 ஆக உயரும், லாரி பேருந்து போன்ற வாகனங்களுக்கு ரூ.190 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.195 ஆக உயரும்.
ஸ்ரீபெரும்புதூரில், சூரப்பட்டு, ஆத்தூர், பூதக்குடி, சின்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதில் சென்னையிலிருந்து பெங்களூரு, சேலம் மற்றும் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 6 சுங்கச்சாவடிகளும் அடங்கும்.