மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு முக்கிய கட்சிகளாக இருக்கும் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன.
இதனை உண்மைப்படுத்தும் வகையில் கடந்த வாரம் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை டெல்லியில் சந்தித்து பேசினார். தமிழகத்தில் திமுக, அதிமுக போல உத்தர பிரதேசத்தில் இந்த இரு கட்சிகளும் இருந்து வருகின்றன.
மக்களவை தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய மாநிலமாக உத்தர பிரதேசம் இருக்கிறது. இங்கு மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மை பெறும் கூட்டணிக்கு மத்தியில் ஆட்சியை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.
உத்தர பிரதேத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தனது அமைச்சரவையில் அகிலேஷ், மாயாவதி கட்சி எம்எல்ஏக்களுக்கு வாய்ப்புத் தரவில்லை. இதனால் இரு தலைவர்களும் காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் கூட்டணிக்குள் வந்தால் 10-க்கும் குறைவான தொகுதிகளைக் காங்கிரசுக்கு அளிக்க சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் காங்கிரஸ் சற்று அதிருப்தியில் உள்ளது.
இதுகுறித்து ட்விட் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், '' உத்தர பிரதேசத்தில் தேர்தலை எதிர்கொள்ளக் காங்கிரஸ் தயாராகி விட்டது. மக்கள் நலனுக்காக சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயார். ஆனால் எங்களது பெருந்தன்மையை பலவீனமாகப் பார்க்கக் கூடாது'' என்று கூறியுள்ளார்.
அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களால் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.