This Article is From Feb 06, 2020

'தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் நடிகர் விஜய்' - காங்கிரஸ் தலைவர் அறிக்கை!!

பிகில் திரைப்படத்திற்காக பெற்ற சம்பளம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக வருமான வரித்துறை தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் நடிகர் விஜய்' - காங்கிரஸ் தலைவர் அறிக்கை!!

தமிழகத்தில் நேற்று முதல் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 77 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பிகில் திரைப்பட வசூல், அதில் நடித்த விஜய்க்கு வழங்கப்பட்ட ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 77 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையொட்டி, நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் சென்னைக்கு திரும்பி விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்துள்ளார். இந்த நிலையில், வருமான வரி சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கும் நடிகர் விஜய் அஞ்சக் கூடாதென்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

தமிழக அரசியல் களம் பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு எதிராக வலிமை பெறுவதை தடுக்கிற வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. சில நிகழ்வுகள் திரைக்கு முன்னாலும், இன்னும் சில திரைக்கு பின்னாலும் நடைபெற்று வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. 

தமிழ் திரைப்பட உலகத்தினரால் இளைய தளபதி என்று அன்புப் பெருக்கோடு அழைக்கப்படுகிற நடிகர் விஜய் அவர்களின் வீடுகளிலும், தயாரிப்பாளர் அன்புசெழியன் சம்மந்தப்பட்ட மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டிருக்கிறார்கள். நெய்வேலியில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் பங்கு கொண்டிருந்த நடிகர் விஜய், வருமான வரித்துறையினரால் வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.

நடிகர் விஜய் ஆளுங்கட்சிக்கு எதிராக இளைய சமுதாயத்தினரின் கோபத்தை வெளிப்படுத்துகிற வகையில் மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்களில் சில வசனங்களைப் பேசியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவார்கள். நடிகர் விஜய்யைப் பொறுத்தவரை அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லையே தவிர, அரசியல் உணர்வோடு திரைப்படங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். 

குறிப்பாக, மத்திய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி. வரி, பணமதிப்பு நீக்கம் ஆகியவை குறித்து அவரது திரைப்படங்களில் விமர்சனம் செய்யப்பட்டது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த வசனங்களை உடனடியாக நீக்க வேண்டுமென்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா கருத்து கூறும் போது, நடிகர் விஜய் என்ற பெயருக்கு முன்னாலே ஜோசப் விஜய் என்று அழைத்து கிறிஸ்துவ மதசாயம் பூசியதை அனைவரும் அறிவர். அதேபோல, அ.தி.மு.க. அமைச்சர்களும் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார்கள்.

இந்நிலையில் வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்துவது ஏதோ ஒருவகையில் அவரை அச்சுறுத்துகிற நடவடிக்கையாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஒருபக்கம் நடிகர் ரஜினிகாந்த் வருமானத்தை மறைத்த விவகாரத்தில் குறைந்தபட்ச அபராதமாக ரூபாய் 66.22 லட்சம் வசூலிக்க வருமான வரித்துறை ஆணையிட்டுள்ளது. தமது வருமானத்தை சரிகட்டுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் 2002-03 இல் ரூபாய் 2.63 கோடியை 18 சதவீத வட்டிக்கு கடன் கொடுத்து ரூபாய் 1.99 லட்சம் லாபம் அடைந்திருப்பதாக கணக்கில் கூறியிருக்கிறார்.

 ஆனால் 2004-05 ஆம் ஆண்டிலோ ரூபாய் 1.71 கோடி வட்டிக்கு கடன் கொடுத்ததில் வசூல் ஆகாததால் வாராக் கடனாக மாறி, ரூபாய் 33.93 லட்சம் நஷ்டம் அடைந்ததாகவும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியிருக்கிறார். இதன்மூலம் வருமான வரித்துறையின் கிடுக்கிப் பிடியில் ரஜினிகாந்த் சிக்கிக் கொண்டிருப்பது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. இச்சூழலில் தான் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்று எவரும் கூறிவிட முடியாது.

இந்நிலையில் ரூபாய் 1 கோடிக்கு குறைவாக வரி தொடர்பான வழக்குகளில் மேல்முறையீடு தேவையில்லை என்று வருமான வரித்துறையின் சுற்றறிக்கையினால் நடிகர் ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது. இந்த வகையில் வருமான வரித்துறையின் நடவடிக்கை நடிகர் ரஜினிகாந்தை பிரச்சினையிலிருந்து முழுமையாக விடுவித்திருக்கிறது.

ஆனால், தமிழக இளைஞர்கள் பட்டாளத்தின் கவர்ச்சிமிக்க நடிகரான விஜய், மத்திய வருமான வரித்துறையின் சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதை ஏதோ வருமான வரித்துறையின் சோதனையாக மட்டும் கருத முடியாது. ஏனெனில் மத்திய பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகள் கடந்த சில வருடங்களாக எத்தகைய சோதனைகளை எத்தனை முறை தமிழகத்தில் நடத்தியது என்பதையும், அதனுடைய தொடர் நடவடிக்கைகள் எந்த நிலையில் இருப்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் நடிகர் விஜய் மீது வருமான வரித்துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகளின் உள்நோக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

எனவே, நடிகர் விஜய் மீது வருமான வரித்துறை தொடுத்திருக்கும் சோதனைகள் மூலம் அவரது உரிமைக் குரலை ஒடுக்கி, அச்சுறுத்தி விடலாம் என மத்திய பா.ஜ.க. அரசு கருதுமேயானால் அது வெறும் பகல் கனவாகத் தான் முடியும். இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற நடிகர் விஜய் அஞ்சக் கூடாது என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

.