திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் மூலம், சாலைப் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டன. இந்த புதிய விதிமுறைகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தன. அந்த விதிமுறையின் படியான அபராதங்கள் மேற்கு வங்கத்தில் வசூலிக்கப்படாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த இந்த புதிய விதிமீறல்களை, குஜராத்தில் ஆளும் பாஜக அரசு திருத்தியுள்ளது. அந்தத் திருத்தத்தின்படி அபராதங்களின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிய அபராத நடைமுறை குறித்து மம்தா, “சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்திலேயே நாங்கள் எதிர்த்தோம். பொது மக்களை அது அதிகம் பாதிக்கும். பணம் வசூலிப்பதால், இருக்கும் பிரச்னை சரியாகிவிடாது. மனிதநேய நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஆனால் மத்திய அரசோ, அதிக அபராதங்கள் விதிப்பதால் நாட்டின் சாலைகள் பாதுகாப்பாக மாறும் என்று உறுதிபடி தெரிவித்து வருகிறது.
குஜராத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசும், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை நடைமுறைகளை அமல் செய்வதில் சுணக்கம் காட்டி வருகிறது.
கடந்த ஜூலை மாதம் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. செப்டம்பர் 1-ல் அமலுக்கு வந்தது.
புதிய சட்டத்தின்படி, ஹெல்மட் அணியாமல் சென்றால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். முன்னர் இது 100 ரூபாயாக மட்டுமே இருந்தது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். முன்னர் இது 1,000 ரூபாயாகத்தான் இருந்தது.
மது போதையில் வண்டி ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம். முன்னர் இது 2,000 ரூபாயாக இருந்தது. வேகமாக வாகனம் ஓட்டினால் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.