லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவுக்கு எதிரான சீன ஆக்கிரமிப்பால் தான் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுக் குழுவின் தலைவரான எலியட் ஏங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விதிமுறைகளை மதித்து, தற்போதுள்ள வழிமுறைகளை பின்பற்றி பேச்சுவார்த்தை மூலம் எல்லை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஏங்கல் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நடந்து வரும் சீன ஆக்கிரமிப்பால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். சர்வதேச சட்டத்தின்படி பிரச்சினைகளை தீர்ப்பதை தவிர்த்து தனது அண்டை நாடுகளை கொடுமைப்படுத்த தயாராக இருப்பதாக சீனா மீண்டும் நிரூபித்து வருகிறது.
"அனைத்து நாடுகளும் ஒரே மாதிரியான விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும், அது தான் 'சரியானதாக இருக்கும்' தற்போதுள்ள வழிமுறைகளை பின்பற்றி பேச்சுவார்த்தை மூலம் எல்லை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், என்று அவர் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
20 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500கி.மீ எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை. ஒருவருக்கொருவர் வசம் உள்ள தொலைதூரப் பகுதிகளின் பெரிய பகுதிகளுக்கு உரிமை கோர முடியவில்லை.
அதுபோல் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் இராணுவ மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.
இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஆனால் அதை ஏற்க இந்தியா நாசூக்காக மறுத்துவிட்டது. இதேபோல் சீனாவும் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
சீன இராணுவத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் அமெரிக்கா கூட்டாளியாக முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ தெரிவித்துள்ளார்.