বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 05, 2020

கொரோனாவுக்கு எதிராக விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய நாட்டு மக்கள்

மக்கள் அகல் விளக்குகளையும், மெழுகுவர்த்திகளையும் தங்கள் வீடுகளிலும், மேல் மாடங்களிலும், ஏற்றி வைத்துள்ளனர்.

Advertisement
இந்தியா Posted by (with inputs from ANI)

9 நிமிடங்கள் விளக்குகளை அணைக்க வேண்டும் என பிரதமர் கோரியிருந்தார்

New Delhi:

இந்தியாவில் கொரோனா தொற்றால் 3577 பேர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் பிரதமரின் கோரிக்கையை ஏற்று லட்சக்கணக்கான மக்கள் அத்தியாவசியமற்ற விளக்குகளை அணைத்து, அகல் விளக்குகளையும், மெழுகுவர்த்திகளையும் தங்கள் வீடுகளிலும், மேல் மாடங்களிலும், ஏற்றி வைத்துள்ளனர்.

தீபாவளி அல்லது இதர பண்டிகை தினம் போல மக்கள் இரவு 9 மணியளவில் பல்லாயிரக்கணக்கில் அகல் விளக்குகளையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றி மின் விளக்கினை அணைத்திருந்தனர். பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடிக்கச் செய்து பிரதமரின் கோரிக்கையை நிறைவேற்றி ஆரவாரமாகக் கூச்சலிட்டனர். இதில் பாதர் மாதாகி ஜே என்கிற கோஷம் அதிகமாகப் பிரதிபலித்தது.

பிரதமர் இரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து தீபங்களை ஏற்றுமாறு கோரியிருந்தார். ஆனால், மக்கள் கிட்டதட்ட 30 நிமிடங்களுக்கும் மேலாக விளக்கினை ஏற்றி வைத்து ஆரவாரமிட்டுக்கொண்டிருந்தனர். மின் விளக்குகளும் 30 நிமிடத்திற்கும் மேலாக அணைக்கப்பட்டிருந்தன.

பிரதமர் 9.30 மணியளவில், டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் குத்துவிளக்கு ஏற்றிய புகைப்படத்தினை ட்விட்டரில் ஒரு சமஸ்கிருத கவிதையோடு இணைத்து பகிர்ந்திருக்கிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வீடுகளுக்கு வெளியே விளக்குகளை ஏற்றி வைத்தனர். அதே போல உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரும் விளக்குகளை ஏற்றியிருந்தனர்.

Advertisement

உத்ரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் சுடர்விடும் விளக்குகளுடன் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டனர்.

நாடு முழுவதும் முழு முடக்க உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியமற்ற அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் கடைகளும் மூடப்பட்டன. ஆனால், சாலை ஓரங்களில் அகல் விளக்குகள் அதிக அளவில் விற்கப்பட்டன. பிரதமரின் இந்த அறிவிப்பானது மின்வாரிய அமைப்புகளுக்கிடையே அச்சத்தினை துண்டியிருந்தது. இதனால் மத்திய மின்வாரியம் அறிக்கையினை வெளியிட்டிருந்தது. ஆனாலும், 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டிருந்ததது.  நல்வாய்ப்பாகப் பெரிய அளவில் மின் தடை குற்றச்சாட்டுகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஒற்றுமையை நிரூபிப்பதற்கான பிரதமரின் இரண்டாவது அழைப்பு இதுவாகும்.  இந்தியாவில் 3577 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 83 தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் 1.2 மில்லியன் மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டதட்ட 66,000 மக்கள் இறந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

With input from ANI

Advertisement