Read in English
This Article is From Aug 17, 2018

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச் சடங்கு இன்று டெல்லியில் நடக்கிறது

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 93

Advertisement
இந்தியா

Highlights

  • 1 மணியளவில் அவரது உடல் ராஷ்டிரிய ஸ்மிரிதி சமாதிக்கு எடுத்து செல்லப்படும்
  • நேற்று மாலை வாஜ்பாய் காலமானார்
  • வாஜ்பாயின் மரணத்தை ஒட்டி அரசு சார்பில்,7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்
New Delhi:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 93. சிறுநீரக தொற்று காரணமாக கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாயின் உடல் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து, இந்திய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர், பேச்சாளர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினர் என பன்முகத்தன்மை கொண்டவர் வாஜ்பாய். மூன்று முறை பிரதமர் பதவி வகித்தவர் வாஜ்பாய்.1996-ம் ஆண்டு 13 நாட்களும், 1998-ம் ஆண்டு 13 மாதங்களும், 1999-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார். காங்கிரஸ் அல்லாது 5 ஆண்டுகள் முழுமையாக நீடித்த ஒரு ஆட்சி, வாஜ்பாயினுடைய ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி கிருஷ்ணா மேனன் மார்கில் உள்ள பங்களாவில் வசித்து வந்தார். அங்கு நேற்று மாலை அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருக்கின்றனர். 

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி உள்ளிட்டவர்கள் வாஜ்பாயின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

சற்று நேரத்தில் வாஜ்பாயின் உடல், பாஜக-வின் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

இன்று 1 மணியளவில் அவரது உடல், ராஷ்டிரிய ஸ்மிரிதி சமாதிக்கு எடுத்துச் செல்லப்படும். இதையொட்டி, டெல்லியில் இருக்கும் பல சாலைகள் முடக்கப்பட்டு, திசை மாற்றி விடப்பட்டுள்ளது.

வாஜ்பாய் மறைவு குறித்து நேற்று வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்த மோடி, ‘இது சகாப்தத்தின் முடிவு. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தந்தையை இழந்தது போல இருக்கிறது. இந்தியாவின் உண்மையான மகன் அவர். அடல்ஜி மறைந்திருக்கலாம். ஆனால், அவரின் பார்வை, யோசனை, எண்ணம் இந்தியர்களான நமக்கு தூண்டுகோலாக இருக்கும்’ என்று பேசினார்.

Advertisement