கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டும், அண்மையில் எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் என நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், தற்போது டெல்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துக்கொள்ள இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
இதே போல இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துக்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை செயலாக்க ஏழு நாட்கள் அவகாசத்தையும் இந்தியா வழங்கியுள்ளது.
புதுடெல்லியிலுள்ள பாகிஸ்தானிய தூதரக உயர் அதிகாரிகளை இன்று காலை அழைத்து, "உளவு நடவடிக்கைகள்" மற்றும் "பயங்கரவாத அமைப்புகளுடன் பரிவர்த்தனைகளை பராமரித்தல்" ஆகியவற்றில் பாகிஸ்தான் அதிகாரிகளின் தொடர் பங்களிப்பு குறித்து இந்தியா பலமுறை கவலைகளை வெளிப்படுத்தியதை சுட்டிக்காட்டியிருந்தது.
"பாகிஸ்தானின் நடத்தை வியன்னா மாநாட்டு தீர்மானத்துக்கோ, இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தவோ உதவவில்லை. மாறாக, இது எல்லை தாண்டிய வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு பெரிய கொள்கையின் உள்ளார்ந்த செயல்பாடுகளை கொண்டதாக உள்ளது.“ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் இரண்டு அதிகாரிகள் கடத்தப்பட்டதையும், அவர்கள் காயத்துடன் மீட்கப்பட்டதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியிருந்தது. காயமடைந்திருந்த இருவரும் பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) காவலில் இருந்ததாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான், அவர்கள் சாலை விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. ஜூன் 22, 2020 அன்று இந்தியா திரும்பிய அதிகாரிகள், பாகிஸ்தான் ஏஜென்சிகளினால் அனுபவித்த கொடுமைகளை விளக்கியுள்ளனர்.
இந்த ஆண்டு மே 31 ஆம் தேதி இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய தூதரகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதை இந்தியா கையுங்களவுமாக பிடித்ததையும் குறிப்பிட்டிருந்தது. அபீத் உசேன் மற்றும் தாஹிர்கான் என அடையாளம் காணப்பட்ட இருவரும் விசா பிரிவில் பணிபுரிந்தனர் மற்றும் போலி அடையாள ஆவணங்களை பயன்படுத்தியிருந்தனர். இந்நிலையில் 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.