ஏர் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமனை, தாயகம் அழைத்து வர இந்திய அரசு தரப்பு, பாகிஸ்தானுக்கு ஒரு சிறப்பு விமானப்படை விமானத்தை அனுப்பலாம் என்று திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாகவும் NDTV-க்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
புதன் கிழமை காலையில் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அபினந்தனை இன்று விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வாகா- அட்டாரி எல்லையில் இன்று அபினந்தன் இந்திய தரப்பிடம் ஒப்படைக்கப்படுவார் என்று கூறியுள்ளது பாகிஸ்தான்.
நேற்று பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் அபினந்தனின் விடுதலை குறித்து அறிவிப்பு வெளியிட்டார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான்.
அபினந்தனை திருப்பி ஒப்படைக்க பாகிஸ்தானுக்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, அம்ரிஸ்டரில் இருக்கும் வாகா எல்லைக்கு சாலை மார்க்கமாக அழைத்து வருவது. மற்றொன்று, இஸ்லாமாபாத்திலிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வாகா எல்லையில் அதிக மக்கள் கூட வாய்ப்பிருப்பதால், அங்கு அபினந்தனை வர வழைக்க இந்திய தரப்பு விரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்திய தரப்பு, அபினந்தனை டெல்லிக்கு அழைத்து வந்து, அவருக்கு உடனடியாக மருத்துவ சோதனை செய்யலாம் என்றுதான் நினைத்திருந்தது. ஏனென்றால், பாகிஸ்தானில் அபினந்தன் விமான விபத்துக்குப் பிறகு தரையிறங்கியதும் அவர் அந்நாட்டு மக்களால் பலமாக தாக்கப்பட்டார்.
அதே நேரத்தில் வாகா எல்லையில்தான் பாகிஸ்தான் தரப்பு, அபினந்தனை ஒப்படைக்கத் தயாராகி வருகிறது. இதையடுத்து, அங்கு பலர் கூடியுள்ளனர். பல இடங்களில் தேசப்பக்தி பாடல்களும், ‘பாரத் மாதா கி ஜெய்' என்ற கோஷங்களும் கேட்டபடி இருக்கிறது.
அபினந்தனின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக இந்திய அளவில் #WelcomeBackAbhi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
புதன் கிழமை காலை இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் விமானத் தாக்குதல் நடைபெற்றபோது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து அவரை பாகிஸ்தான் பிடித்து, தங்களது பிடியில் வைத்துள்ளது.
மேலும் படிக்க: பாகிஸ்தான், போர் விமானி அபினந்தனை விடுவிப்பதற்கான பின்னணி என்ன..?