This Article is From Feb 28, 2019

‘இந்தியா ஒரே நாடாக போராடும், இந்தியா ஒரே நாடாக வெல்லும்!’- பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, இன்று சுமார் 1 கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ மூலம் உரையாற்றி வருகிறார்.

‘இந்தியா ஒரே நாடாக போராடும், இந்தியா ஒரே நாடாக வெல்லும்!’- பிரதமர் மோடி பேச்சு

உங்கள் பணி எதுவாக இருந்தாலும், அதில் கொஞ்சம் அதிகம் மெனக்கெடுங்கள்- மோடி

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி, இன்று சுமார் 1 கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ மூலம் உரையாற்றி வருகிறார். 15,000 இடங்களில் இருக்கும் தொண்டர்களிடம் ஒரே நேரத்தில் மோடி உரையாற்றி வருகிறார். இது குறித்து பாஜக தரப்பு, ‘இதுதான் உலகின் மிகப் பெரிய வீடியோ கான்ஃபெரன்ஸாக இருக்கும்' என்றுள்ளது. 

பிரதமர் மோடி வீடியோ மூலம் பேசுகையில், ‘நமது எதிரிகள் தீவிரவாதத்துக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கும் எதிராகவும் செய்லபடுவது நம் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கத்தான். இப்படிப்பட்ட நேரத்தில் நாம் ஒன்றாக நிற்க வேண்டும். நமது ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். என்ன நடந்தாலும், நமது முன்னேற்றமும் நமது பணியும் நிறுத்தப்படக் கூடாது.

உங்கள் பணி எதுவாக இருந்தாலும், அதில் கொஞ்சம் அதிகம் மெனக்கெடுங்கள். இந்தியாவை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்ல பாடுபடுங்கள். இந்தியா ஒன்றாக நிற்கும். இந்தியா ஒன்றாக உழைக்கும். இந்தியா ஒன்றாக வளரும். இந்தியா ஒன்றாக போராடும். இந்தியா ஒன்றாக வெற்றி பெறும்.

நாட்டின் இளைஞர்கள் இந்தியாவைப் புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்தியாவுக்கு எட்டிப்பிடிக்கும் தூரத்தில் வெற்றி உள்ளது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் உண்மையாக உழைத்து, நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்' என்று பேசினார்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்த வீடியோ கான்ஃபெரன்சிங் நிகழச்சி நடைபெற்று வருவது கவனத்துக்குரியது. 

கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்தியா பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதை கணக்கில் கொள்ளாமல் மெகா வீடியோ கான்ஃபெரன்சிங் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் NDTV-யிடம் பேசியபோது, ‘தற்சமயம், நாம் ஒரு நெருக்கடியில் இருக்கிறோம். பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள பைலட் மீண்டும் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று கவலையில் உள்ளோம். அவர் எப்படி இருக்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் மோடி, சில பூத் கமிட்டி தொண்டர்களிடம் பேசுவதில் கவனம் செலுத்தி வருகிறார்' என்று கடுமையாக சாடியுள்ளார். 

இன்று காங்கிரஸ் கட்சி நடத்தவிருந்த செயற்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று டெல்லியில் சந்தித்த நாட்டின் 21 எதிர்கட்சிகள், ‘அரசியல் ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தைப் பயன்படுத்துகிறது ஆளுங்கட்சி' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டின.

 

மேலும் படிக்க - "பிரதமர் மோடி பாஜக தொண்டர்களுடன் உரையாடுகிறார்... கொதிக்கும் எதிர்கட்சிகள்!"

.