This Article is From Sep 18, 2018

பிரக்சிட்டுக்கு பிறகு இங்கிலாந்து குடியேற்றம்… நோபல் பரிசு பெற்ற இந்தியர் கருத்து!

இங்கிலாந்தில் குடியேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Sir Venkatraman Ramakrishnan) தெரிவித்துள்ளார்

பிரக்சிட்டுக்கு பிறகு இங்கிலாந்து குடியேற்றம்… நோபல் பரிசு பெற்ற இந்தியர் கருத்து!

அறிவியல் தோற்றால் எல்லோரும் தோற்போம், பேராசிரியர் வெங்கி (Sir Venkatraman Ramakrishnan)

London:

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இங்கிலாந்து மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு பிறகு இங்கிலாந்தில் குடியேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Sir Venkatraman Ramakrishnan) தெரிவித்துள்ளார். 

வெங்கட்ராமன், இங்கிலாந்தின் முக்கியமான விஞ்ஞானிகளின் குழுவான ராயல் சொசைட்டியின் தலைவராக இருக்கிறார்.

இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற ராயல் சொசைட்டி நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராதவர்களுக்கு தற்போது இருக்கும் குடியேற்ற நடைமுறை மிகவும் கடினமானதாக இருக்கிறது. மற்ற நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறுபவர்கள் குறித்து தற்போது இங்கிலாந்தில் எதிர்மறையான எண்ணம் நிலவி வருவதால், இந்த விஷயம் குறித்து சரியாக விவாதிக்கப்படுவதில்லை. 

ஆனால் ராயல் சொசைட்டியில் இருக்கும் நாங்களும், உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் விஞ்ஞானிகளும் ஒரு சீரான குடியேற்ற நடைமுறையைக் கொண்டு வருவது குறித்து அரசிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். 

பிரக்சிட் குறித்தும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர் நிலவப் போகும் நிலை குறித்தும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பேச்சுகளால், அறிவியல் பின்னுக்குத் தள்ளப் படக் கூடாது. அறிவியல் துறையில் இருப்பவர்கள் சுலபமாக இங்கிலாந்தில் குடியேறும் நிலை இருக்க வேண்டும். அறிவியல் தோற்றால் நாம் எல்லோரும் தோற்றுப் போவோம்’ என்று கருத்து தெரிவித்தார். 

பேராசிரியர் வெங்கட்ராமன், தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர். அமெரிக்காவில் பயாலஜி படித்த வெங்கட்ராமன், 19 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் குடியேறினார். 

.