சூடான் நாட்டில் பீங்கான் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 130 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், 'சூடானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவம் நடந்துள்ள இடத்திற்கு விரைந்துள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில், 'சூடான் தலைநகர் கார்டோமில் பஹ்ரி என்ற இடத்தில் உள்ள சலோமி பீங்கான் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதில் இந்தியர்கள் சிலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
.
இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்கள். +249-921917471 என்ற உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்த தகவல்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.' என்று கூறியுள்ளார்.
இந்த தொழிற்சாலையில் 50 இந்திய ஊழியர்கள் பணியில் இருந்தனர். வெடி விபத்து ஏற்பட்ட பின்னர் தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
'விபத்தால் ஏற்பட்ட சத்தம் அதிகமாக இருந்தது. தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் தீயில் பற்றி எரிந்தன.' என்று அருகில் உள்ள தொழிற்சாலையின் பணியாளர்கள் தெரிவித்தனர்.
சூடான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொழிற்சாலைப் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 23 பேர் உயிரிழந்தனர். 130-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கேஸ் டாங்கர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலின் அடிப்படையில், தொழிற்சாலையில் பாதுகாப்பு குறைபாடே இந்த விபத்துக்கு காரணம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இந்தியர்களின் விவரங்களை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தற்போது வரை 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.